கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலைப் பகுதியில கண்ணிவெடி அகற்றலின்போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்றும் இனங்காணப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பளை பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர். தொடர்ந்து பொலிஸார் மாவட்ட நீதிவானின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர்.
கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிவான் இஸ்மாத் ஜெமில் சம்பவ இடத்துக்குச் சென்று குறித்த மனித எச்சங்கள் இனங்காணப்பட்ட பகுதியைப் பார்வையிட்டார். தொடர்ந்தும் அந்தப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியை முன்னெடுக்குமாறும், கிடைக்கப் பெறு கின்ற எச்சங்கள் மற்றும் தடயங்கள் தொடர்பாக பளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் கவனத்துக்குக் கொண்டு செல்லுமாறும் உத்தரவிட்டார்.
அத்துடன், கிடைக்கப்பெற்ற மனித எச்சங்களை சட்ட வைத்திய அதிகாரி மூலம் பரிசோதனைக்கு உட்படுத்த அனுப்பி வைக்குமாறும் பணித்தார். இது தொடர்பில் எதிர்வரும் திங்கட் கிழமை சம்பவ இடத்தை மீண்டும் சென்று பார்வையிடுவதாகவும் நீதிவான் தெரிவித்தார்.
