இஸ்ரேலின் வடக்கு, மத்திய பகுதிகளை குறிவைத்து ஹிஸ்புல்லா அமைப்பு 320 ஏவுகணைகளை சரமாரியாக வீசியது. 20-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் இஸ்ரேல் பகுதிகள் மீது குண்டுகளும் வீசப்பட்டன. இதையடுத்து, இஸ்ரேலில் அவசரநிலை அமுல்படுத்தப்பட்டது.
லெபனான் நாட்டின் பிரதான அரசியல்கட்சியாகவும், துணை இராணுவ படையாகவும் ஹிஸ்புல்லா செயல்படுகிறது.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா என்பன ஹிஸ்புல்லாவை தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளன. ஈரானின் கைப்பாவையாக செயல்படும் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்புக்கும், இஸ்ரேல் இராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.
கடந்த ஜூலை 30-ஆம் திகதி லெபனானில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் மூத்த தலைவர் புவாட் ஷ_கர் உயிரிழந்தார். இதன்பிறகு, இருதரப்புக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது.
இந்த சூழலில் ஷியா முஸ்லிம்களின் அர்பாயின் தினத்தையொட்டி இஸ்ரேலின் வடக்கு, மத்திய பகுதிகளை குறிவைத்து ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பு 320 ஏவுகணைகளை அடுத்தடுத்து வீசியது. 20-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் இஸ்ரேல் பகுதிகள் மீது சரமாரியாக குண்டுகளும் வீசப்பட்டன.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் விமானப் படையின் 100 போர் விமானங்கள், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தின.
மத்திய கிழக்கில் தொடர்ந்து குழப்பம் நீடித்தால் மூன்றாம் உலகப் போர் வெடிக்கும் ஆபத்து உள்ளது என்று சர்வதேச நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா படுகொலைக்காக இஸ்ரேலை சரியான நேரத்தில் பழிவாங்குவோம் என்று ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனவே, இஸ்ரேல் மீது ஈரான் இராணுவம் எந்த நேரமும் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இஸ்ரேலுக்கு பாதுகாப்பு வழங்க அமெரிக்க கடற்படையின் 2 விமானம்தாங்கி போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிகள் ஓமன் வளைகுடா பகுதியில் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டு உள்ளன.