பிரதான அரசியல் கட்சிகள் தம்பக்கமே மக்கள் ஆதரவு அலை உள்ளது என்பதை வெளிக்காட்டும் வகையில், மேதினக் கூட்டத்தில் பெருந்திரளான மக்களை பங்கேற்கவைப்பதற்காக, அவர்களை கொழும்புக்கு அழைத்துவருவதற்காக சுமார் ஆயிரம் மில்லியன் ரூபாவரை செலவிடவுள்ளன என்று தெரியவருகின்றது.
அடுத்த தேர்தலை இலக்காகக்கொண்டு தமது அரசியல் பலத்தை வெளிப்படுத்தும் வகையில் பிரமாண்ட கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாலேயே பிரதான கட்சிகளுக்கு இம்முறை கூடுதல் செலவை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது என சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மக்களை அழைத்துவருவதற்கான போக்குவரத்து கட்டணம் மற்றும் அவர்களுக்கான உணவு உள்ளிட்ட ஏற்பாடுகளுக்கே இவ்வளவு பெரிய தொகை செலவிடப்படவுள்ளது.
அத்துடன், கட்டவுட்கள், பேனர்கள், ஒலிபெருக்கி வசதிகள், மேடை அமைப்பு செலவு உள்ளிட்டவற்றுக்கும் பல லட்சங்களை பிரதான கட்சிகளுக்கு செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
களுத்துறை, கம்பஹா மற்றும் கொழும்பு புறநகர் பகுதிகளில் இருந்தே பெருமளவான பஸ்கள் கொழும்பு வரவுள்ளன. மேல் மாகாணத்தில் உள்ள மாவட்டங்களில் இருந்து கொழும்பு வருவதற்கு பஸ்ஸொன்றுக்கு 35 ஆயிரம் ரூபாவை வழங்க வேண்டியுள்ளது. அநுராதபுரம் உள்ளிட்ட தூர பிரதேசங்களில் இருந்து வருவதற்கான போக்குவரத்து கட்டணமாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா அறிவிடப்படும் என தெரியவருகின்றது.
நபரொருவருக்கு உணவு தேவைக்காக 300 முதல் 450 ரூபாவரை ஒதுக்கப்படவுள்ளது.
இவ்வாறு செலவு தொகை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள், செல்வந்தர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்களிடம் கட்சிகள் ஒத்துழைப்பு கோரியுள்ளன எனவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன , ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, உத்தர லங்கா சபாகய, முன்னிலை சோஷலிசக் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கொழும்பை மையப்படுத்தியே பிரதான மே தினக் கூட்டங்களையும், பேரணிகளையும் ஏற்பாடு செய்துள்ளன.
தேசிய மக்கள் சக்தி கொழும்புக்கு மேலதிகமாக யாழ்;ப்பாணம், மாத்தறை, அநுராதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மே தினக் கூட்டங்களை நடத்தவுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் உள்ளக மோதல் வெடித்துள்ளதால் இரு அணிகளும் இரு கூட்டங்களை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.