” நாமல் ராஜபக்ச உள்ளிட்ட மொட்டு கட்சியினர் கர்மவினையை அனுபவித்துவருகின்றனர். கூட்டணி கலாசாரம் பற்றி தற்போது கதைக்கும் அவர்கள் கோட்டாபய ராஜபக்ச ஆட்சியில் அதனை மறந்தே செயற்பட்டனர்.” – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” கூட்டணியாக செயற்படும்போது பங்காளிக்கட்சிகளினதும் ஆலோசனையை பெற்று, அதற்கமைய செயற்படுமாறு ஜனாதிபதிக்கு நாமல் ராஜபக்ச அறிவுரை வழங்கியுள்ளார். ஆனால் கோட்டாபய ராஜபக்ச ஆட்சிகாலத்தில் கூட்டணி அரசியல் கலாசாரம் பற்றி அவர்களுக்கு தெரிந்திருந்தால் அந்த ஆட்சிதான் இன்றும் நீடித்திருக்கும். நாமலின் கருத்தை கேட்கும்போது சிரிப்புதான் வந்தது. அதுதான் கர்மவினை.
அதேவேளை, ஜனாதிபதி தேர்தலை எப்படியாவது ஒத்திவைத்து ஆட்சியை தக்கவைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கின்றார். அதற்காக சலுகை அறிவிப்புகள் வெளிவருகின்றனர். இப்படியான தற்காலிக நடவடிக்கைகளால்தான் நாடு நாசமானது. எனவே, புதிய அரசியல் பயணத்துக்கு மக்கள் தயாராக வேண்டும்.” – என்றார் விமல்.
