ராஜபக்சக்களுடன் பயணித்தால் வடக்கு வாக்குகள் தனக்கு விழாது என்பது ரணிலுக்கு தெரியும். அதனால்தான் அரசியல் டீல் அடிப்படையில் மொட்டு கட்சி வேட்பாளர் ஒருவரையும் களமிறக்க ஏற்பாடு இடம்பெற்றுவருகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.
இரத்தினபுரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இந்த தகவலை வெளியிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ராஜபக்சக்களின் காவலனே ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா பொஜன பெரமுன கட்சியின் உத்தியோகப்பூர்வமற்ற தலைவராகவும் அவரே செயற்படுகின்றார்.
ராஜபக்சக்கள் தனக்கு ஆதரவு வழங்கினால் வடக்கு, கிழக்கு வாக்குகள் கிடைக்காது என்பது ரணிலுக்கு தெரியும். அதனால்தான் அரசியல் சூழ்ச்சி பற்றி சிந்திக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையிலேயே மொட்டு கட்சி வேட்பாளர் ஒருவரை களமிறக்குமாறு ரணில் கூறியுள்ளார். அவ்வாறு இல்லையேல் வடக்க, கிழக்கு வாக்குகள் கிடைக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு வாக்குகளை கொள்ளையடிப்பதற்காகவே ரணில் மொட்டு கட்சி வேட்பாளர் ஒருவரை களமிறக்குகின்றார். ஆனால் வடக்கு மக்கள் ஏமாறமாட்டார்கள். சஜித் பக்கமே நிற்பார்கள்.” – என்றார்.