யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்குள் நுழைந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று பகல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக காலை வேளையில் யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்னால் கொட்டும் மழைக்கு மத்தியிலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டநிலையிலேயே மாவட்ட செயலகத்துக்குள் உள்நுழைந்தனர்.
இந்தியாவிலிருந்து திரும்பி வந்த இலங்கையர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவதற்கான நடமாடும் சேவை இன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்தது.
தன்போது நீதி மற்றும் சிறைச்சாலை அலுவல்கள், அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச கலந்துகொண்ட நிலையில் அவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓ.எம்.பி. வேண்டாம், சர்வதேச நீதி விசாரணையை மட்டுமே நாங்கள் கோருகின்றோம், இரண்டு இலட்சம் ரூபா வேண்டாம், நீதி அமைச்சரே வெளியேறு, விஜயதாச ராஜபக்சவே வெளியேறு எனக் கோஷம் எழுப்பிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரனும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றார்.
