அனுபவமில்லாத ஜனாதிபதியை நியமித்து நாட்டை மீண்டும் ஆபத்தில் தள்ள முடியாது என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பொருளாதார நெருக்கடியை தீர்த்து நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென தனிப்பட்ட முறையில் தாம் நம்புவதாக அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இன்று (18) மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
கேள்வி – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மொட்டு கட்சியின் வேலைத்திட்டம் எவ்வாறு உள்ளது?
பதில் – மொட்டு ஒரு கட்சி என்ற ரீதியில் வேட்பாளரை முன்வைப்பதா இல்லையா என்பது குறித்து இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை அது எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும். உள்ளூர் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடியவர்களை நியமிக்க பொதுத் தேர்தல் நடத்தப்படுகிறது.
ஆனால் நாட்டின் தேசிய பிரச்சினைகளை தீர்க்க ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்படுகிறார். உதாரணமாக, 2005 இல், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டார்.
அத்துடன் நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த மக்கள் மைத்திரிபாலவிற்கு வாக்களித்தனர். ஆனால் அவர் செய்தாரா இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். கோத்தபாய ராஜபக்ச அவர்கள் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்டார்.
கேள்வி – மொட்டில் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவை முன்னிறுத்த வேண்டும் என்று நீங்கள் கூறியிருந்தீர்கள். இது கட்சியின் கருத்தா?
பதில் – அது எனது தனிப்பட்ட கருத்து. இன்று நாட்டில் பெரும் நெருக்கடியாக இருப்பது பொருளாதார நெருக்கடி. இன்று பேசிக்கொண்டிருக்கும் தலைவர்கள் அனைவரும் ஓடிப்போயிருந்த நேரத்தில், பொருளாதார நெருக்கடியை தீர்க்கும் பொறுப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டுமே ஏற்றுக்கொண்டார்.
எனவே, பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டைக் காப்பாற்றி நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்னொரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என என்னைப் போன்ற பலர் நம்புகின்றனர். அதன் பிறகு, திருடர்களைப் பிடிப்பவர்களை, வாய்ப் பேச்சு வீரர்களை; நியமியுங்கள்.
ஆனால் தற்போதைய ஜனாதிபதிக்கு நாட்டின் தேசிய பிரச்சினையை தீர்ப்பதற்கு இன்னொரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என நான் நம்புகிறேன். ஏனெனில் அனுபவமில்லாத ஜனாதிபதியை நியமித்து நாட்டை மீண்டும் ஆபத்தில் தள்ள முடியாது.
கேள்வி – அப்படியென்றால் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மொட்டின் ஆதரவைப் பெறுவார் என்றா?
பதில் – இல்லை.. என் கருத்தைச் சொன்னேன். மோட்டு கட்சி என்ற ரீதியில் எதிர்காலத்தில் தீர்மானம் எடுக்கும்.
கேள்வி – ஆனால் தம்மிக்க பெரேரா ஜனாதிபதி தேர்தலில் மொட்டில் களமிறங்கப் போவதாக கூறுகிறார்?
பதில் – நான் கட்சியின் தீவிர உறுப்பினர். எனக்கு தெரிந்த வரையில் ஜனாதிபதி வேட்புமனு தொடர்பில் தம்மிக்க பெரேராவுடன் ஒரு கட்சி என்ற ரீதியில் அவ்வாறான உடன்பாட்டை எட்டவில்லை. அவ்வாறான கலந்துரையாடல் இடம்பெற்றதாக எமக்கு அறிவிக்கப்படவில்லை.
கேள்வி – ஜனாதிபதி மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரா?
பதில் – அவர் கேட்பாரா இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவர் கேட்டால் அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
