பட்டலந்த அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்யவும் முடியாது, அவரது குடியுரிமையை பறிக்கவும் முடியாது என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை 2001 மார்ச் 29 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
பட்டலந்தவில் உயிரிழந்தவர்களுக்கு நீதி வழங்கப்படும், ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்படுவார், அவரின் குடியுரிமை பறிக்கப்படும் என ஜே.வி.பி. தலைவர்கள் அறிவிப்புகளை விடுத்துவருகின்றனர்.
பட்டலந்த அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு ரணிலை கைது செய்வதற்கும், அவரின் குடியுரிமையை பறிப்பதற்கும் அறிக்கையில் அடிப்படை காரணிகள் இல்லை. கருத்துகளை திரட்ட மட்டுமே மேற்படி ஆணைக்குழுவால் முடியும். தண்டனை வழங்குவதற்குரிய நீதிமன்ற அதிகாரம் அதற்கு கிடையாது.
பட்டலந்த அறிக்கையில் ரணில் விக்கிரமசிங்க குற்றவாளியாக்கப்படவில்லை. அவரின் குடியுரிமையை பறிப்பதற்குரிய பரிந்துரையும் இல்லை. அறிக்கையை வாசித்து பார்க்காததாலேயே ஜே.வி.பியினர் இவ்வாறான கருத்துகளை முன்வைத்துவருகின்றனர்.” – என்றார்.