ரணில் – ராஜபக்ச உறவு முறியுமா? பாதீடு முன்வைக்கப்பட்ட கையோடு ஜனாதிபதியை சந்திக்க மொட்டு அணி திட்டம்

நாட்டை முன்னேற்றுவதற்காக 2048 ஆம் ஆண்டுவரை காத்திருக்க முடியாது. எனவே,  ஜனாதிபதியால் முன்வைக்கப்படும் பாதீடு எவ்வாறு அமையும் என்பதற்காக காத்திருக்கின்றோம். பாதீடு முன்வைக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதியை சந்தித்து பேச்சு நடத்தி முடிவொன்று எடுக்கப்படும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

நாட்டுக்காக தனது அரசியல் எதிரியைக்கூட தலைவராக்கிய நபர்தான் மஹிந்த ராஜபக்ச எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் நாமல் ராஜபக்ச மேலும் கூறியவை வருமாறு,

” மஹிந்த ராஜபக்சவுக்கு 55 வருடகால அரசியல் அனுபவம் உள்ளது.  அரசியலில் பல சம்பவங்களை அவர் கண்டுள்ளார்.  அவர் அங்கம் வகித்த கட்சி (சு.க.) 8 ஆசனங்களுக்கு விழுந்த நிலையையும்  எதிர்கொண்டார். அதேபோல ஒன்றாக இருந்து அப்பம் சாப்பிட்டுவிட்டு,  மறுநாள் சென்றவர்கள் (மைத்திரி) குறித்த அனுபவமும் அவருக்கு உள்ளது . தனது சகோதரனை ஜனாதிபதி ஆக்கினார். ஆனால் அவர் மஹிந்தவின் அரசியல் எண்ணப்பாடுகளில், எதிர்பார்ப்புகளில் இருந்து விலகிச்சென்றார். இந்த அனுபவமும் மஹிந்தவுக்கு உள்ளது. அதேபோல தனது அரசியலில் 45 வருடகாலமாக எதிரியாக இருந்த (ரணில் விக்கிரமசிங்கவை நாட்டின் அரசியல் உறுதிப்பாட்டுக்காக தலைவர் ஆக்கிய அனுபவமும் மஹிந்தவுக்கு உள்ளது.

ஜனாதிபதியை நாடாளுமன்ற குழுவாக சந்திக்க திட்டமிட்டுள்ளோம். தமது பிள்ளைகளுக்கு சிறந்த உணவை வழங்க 2030 வரை மக்களுக்கு காத்திருக்க முடியாது. முன்னேற்றமடைந்த நாடாக நாட்டை கட்டியெழுப்ப 2048வரை காத்திருக்க முடியாது. அப்படியானால் அரசு எதற்கு? எனவே, வரவு – செலவுத் திட்டத்தில் எவ்வாறான விடயங்களை ஜனாதிபதி முன்வைக்கின்றார் என்பதற்காக காத்திருக்கின்றோம்.” – என்றார்.

Related Articles

Latest Articles