ரயில் மோதி காட்டு யானைகள் பலி

கல்ஓயா மற்றும் ஹிங்குரக்கொட இடையில் எரிபொருள் ஏற்றிச்சென்ற ரயிலுடன் மோதி 2 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.

காட்டு யானைகள் மோதியதில் ரயில் எஞ்சின் மற்றும் 4 எரிபொருள் தாங்கிகள் தடம்புரண்டுள்ளதாக அனுராதபுரம் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

கொலன்னாவிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயில் மின்னேரியா 146 ஆவது மைல்கல் பகுதியில் இன்று(18) அதிகாலை 3.30 மணியளவில் விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதனால் மட்டக்களப்பில் இருந்து புறப்பட்ட மீனகயா கடுகதி ரயில் பொலன்னறுவையில் நிறுத்தப்பட்டது.

இன்று காலை கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு வரை பயணிக்கவிருந்த ரயிலும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்று காலை 6.10க்கு மட்டக்களப்பிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கும் ரயிலும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles