ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னியின் இறுதிச்சடங்கு எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவால்னி, அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒருங்கிணைத்து வந்ததுடன், ஜனாதிபதி புடினை கடுமையாக விமர்சித்தும் வந்தார். இந்த நிலையில், பல்வேறு வழக்குகளில் அவருக்கு 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இதனால் கடந்த 2021-ஆம் ஆண்டுமுதல் அவர் சிறைத் தண்டனை அனுபவித்து வந்தார்.
இதற்கிடையே, கடந்த பெப்ரவரி 17 ஆம் திகதி அவர் திடீரென சிறையிலேயே மரணமடைந்தார். அவரது உயிரிழப்புக்கான காரணம் தற்போதுவரை தெரிவிக்கப்படவில்லை.
நவால்னி மர்மமான முறையில் சிறையில் மரணம் அடைந்த சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நவால்னி மரணம் குறித்து பலரும் சந்தேக கருத்துகளைத் தெரிவித்தனர். இதனிடையே அலெக்ஸி நவால்னியின் உடலை ரஷ்ய அரசு தங்களிடம் ஒப்படைக்க மறுப்பதாக நவால்னியின் மனைவி மற்றும் தாயார் குற்றம்சாட்டியிருந்தனர்.
இதுகுறித்து நவால்னியின் செய்தித் தொடர்பாளர் கிரா யார்மிஷ்,’மாஸ்கோவின் தென்கிழக்கு மரியினோ மாவட்டத்தில் உள்ள தேவாலயத்தில் வரும் மார்ச் 1ஆம் திகதி அலெக்ஸி நவால்னியின் இறுதிச்சடங்கு நடைபெறும். பின்னர் அருகில் உள்ள மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளை, எதிர்க்கட்சி தலைவரின் மரணம் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட்டு உண்மை கண்டறியப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலியா மற்றும் மேற்குலக நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
அத்துடன், இந்த மரணத்துக்கு ரஷ்ய ஜனாதிபதி புடினே பொறுப்புகூற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளன.