ராஜகிரியவில் 11 வயது சிறுமி துஷ்பிரயோகம்: டிக் டொக் பிரபலம் கைது

ராஜகிரிய பிரதேசத்தில் 11 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் டிக் டொக் பிரபலம் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜகிரிய – கலபலுவாவ பிரதேசத்தைச் சேர்ந்த டிக் டொக் பிரபலமான ‘கிரி சமன்’ எனும் ஓஷத நிலான் (21) என்பவர் குறித்த சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அறிவித்துள்ளது.

அத்துடன், சந்தேக நபரின் நண்பர் ஒருவரும் குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அந்த சிறுமியின் பெற்றோர் விசேட தேவையுடையவர்கள் என்பதுடன், மேற்படி சந்தேக நபர்கள் வட்ஸ்அப் மூலம் சிறுமியுடன் நட்பாக பழகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த டிசம்பர் மாதம் இரவு நேரத்தில் சந்தேக நபர் குறித்த சிறுமியை வெளியே அழைத்துச் சென்று, அவருக்கு போதைப் பொருள் வழங்கியுள்ளதுடன், அவரை துஷ்பிரயோகத்துக்கும் உட்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் குறித்த சிறுமி களனி, தெஹிவளை போன்ற பிரதேசங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை குறிப்பிட்டுள்ளது.

சுமார் இரண்டு வாரங்கள் குறித்த சிறுமி முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரும் அவரின் நண்பரும் நேற்று (15) கைது செய்யப்பட்டதுடன், எதிர்வரும் 19 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டிக் டொக் செயலியால் இளைய சமுதாயம் தவறான வழியில் செல்வதை சுட்டிக்காட்டிய ஐ.நா மனித உரிமைகள் பேரவை, அதனை தடை செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகளிடம் கோரியுள்ளது.

Related Articles

Latest Articles