ராஜபக்சக்களுக்கு சம்பிக்க விடுத்துள்ள எச்சரிக்கை….!

“ பின்வாசல் வழியாக அரசின் ஆட்சியை முன்னெடுக்கும் ராஜபக்சவினருக்கு இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மறக்க முடியாத பாடத்தை மக்கள் புகட்டுவார்கள்.”

– இவ்வாறு 43 ஆவது படையணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“தேர்தல் தொடர்பில் அச்சம் கொண்டுள்ள அரசு, அதனை ஒத்திவைக்க ப் பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டு வருகின்றது. அரசின் இந்த முயற்சி இன்னும் முடியவில்லை.

எனினும், அரசு தேர்தலை நடத்தும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். தேர்தலை நடத்துவற்குப் பணம் இல்லை என்பது எந்தவிதத்திலும் காரணமாக அமையாது.

அத்துடன் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் பெரிய சிக்கலான சட்டம் இல்லை. குறுகிய காலத்தில் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்ட திட்டங்களைத் தேர்தல்கள் ஆணைக்குழுவால் வெளியிட வேண்டும்.

கடந்த ஆண்டு நாடு வங்குரோத்து அடைந்தது. இதையடுத்து கடந்த மே மாதம் 9 ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை நாட்டு மக்கள் நேரடியான போராட்டத்தின் மூலம் அதிகாரத்தில் இருந்து இறக்கினர். ஜூலை 9 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்சவைப் பதவியில் இருந்து இறக்கினர்.

தற்போது இவர்கள் பின்வாசல் வழியாக வந்து உள்ளூராட்சி சபைகள், மாகாண சபைகளை ஆளுநர்கள் ஊடாகக் கட்டுப்படுத்துவதுடன் நாடாளுமன்றத்தையும் கட்டுப்படுத்தி வருகின்றனர்.

இம்முறை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ராஜபக்சவினருக்கும் மறக்க முடியாத பாடத்தை மக்கள் புகட்டுவர்” – என்றார்.

Related Articles

Latest Articles