தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு இ.தொ.கா தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், இன்று நடைபெற்ற சம்பள நிர்ணய சபை கூட்டத்தில் முதலாளிமார் சம்மேளனம் பங்கேற்கவில்லை. குறித்த சம்மேளனத்தின் இந்த அலட்சிய போக்குக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடுமையாக கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் இழுத்தடித்துவரும் நிலையில், சம்பள நிர்ணய சபை ஊடாகவேனும் நாளொன்றுக்கு 1, 700 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சி இடம்பெற்றுவருகின்றது.
இதன் ஓர் அங்கமாக சம்பள நிர்ணயசபை இன்று கூடியது. எனினும், முதலாளிமார் சம்மேளனம் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் தோட்ட தொழிலாளர்களின் விடயத்தில் உரிய தீர்வு கிடைகாவிடின் இ.தொ.கா கடும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் என முதலாளிமார் சம்மேளனத்திற்கு செந்தில் தொண்டமான் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட சம்பள நிர்ணய சபையிடம் அலட்சிய போக்கை கடைப்பிடிக்கும் முதலாளிமார் சம்மேளனம், தோட்டத்தில் தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகளை எவ்வாறு அணுகுவார்கள் என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு. இதனால் தான் இ.தொ.கா இவர்களுடைய நடவடிக்கைகளுக்கு எதிராக கடும் போக்கை கடைப்பிடிக்கின்றது
இவர்களுக்கு ஒரு சதவீதமேனும் சம்பள அதிகரிப்பு வழங்குவதில் உடன்பாடு இல்லை.
எனவே தோட்ட தொழிலாளர்களின் நலன் கருதி இ.தொ.கா முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிராக போராட்டம் முன்னெடுக்க தயாராகி வருகிறது எனவும் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
