நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு பிரேரணைக்கு ஆதரவு வழங்கப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று அறிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றுவரும் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய நிவாரண உதவி உள்ளிட்ட விடயங்களுக்காக அவசர நிதியாக 500 பில்லியன் ரூபா கோரும் குறைநிரப்பு பிரேரணை சபையில் இன்று முன்வைக்கப்பட்டது.
இது தொடர்பில் நாளை வாக்கெடுப்பு இடம்பெறவுள்ள நிலையிலேயே அதற்கு ஆதரவளிக்கப்படும் என சஜித் கூறினார்.
அத்துடன், பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து உறுதிமொழிகளும் நிறைவேற்றப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதற்காக வலுவானதொரு பொறிமுறை ஸ்தாபிக்கப்பட வேண்டும் எனவும், அனர்த்த முகாமைத்துவத்தைக் கையாள்வதற்கு தனி அமைச்சொன்று அவசியம் எனவும் எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டினார்.










