அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிலாஸ்கோ தோட்டப்பிரிவான நெதஸ்டல் தோட்டத்தில் இன்று (20) அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் வீடொன்று சேதமடைந்துள்ளது.
20 அறைகளைக்கொண்ட நெடுங் குடியிருப்பு தொகுதியில் வீடொன்று எரிந்து நாசமாகியுள்ளதால், குறித்த வீட்டில் வசித்து வந்த குழந்தை பெற்று சில நாட்களான தாய் உட்பட ஐவர் நிர்க்கதியாகியுள்ளனர்.
அயலவர்கள், தோட்ட பொதுமக்கள் இணைந்து ஏனைய வீடுகளுக்கு தீ பரவாமல் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இதனால் பாரிய அனர்த்தம் தடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தீ பிடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டு நிர்கதிக்கு ஆளாகியுள்ள ஐவர் கொண்ட குடும்பத்தினரை தோட்டத்தில் தற்காலிகமாக உறவினர் வீடு ஒன்றில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் இது தொடர்பான விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-ஆ.ரமேஸ்-










