வழக்கை முடிவுறுத்தி உதவி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கல்வியியல் ஒன்றியத்தின் தலைவரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் பிரதமரும் ,கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசேகருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டு 2665 உதவி ஆசிரியர் நியமனத்துக்கான போட்டி பரிட்சை நடைபெறவிருந்த தருணத்தில் அதற்கு எதிரான நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டது. இதனால் இந்த நியமனத்துக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தடைப்பட்டன. வருடங்கள் இரண்டு கடந்து விட்ட நிலையில் இதுவரையில் எவ்விதமான தீர்வும் கிடைக்கவில்லை.
மலையகத் பெருந்தோட்ட பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை நீக்கும் பொருட்டு கல்வி அமைச்சினால் 2665 ஆசிரிய உதவியாளர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுடிருந்தன. சுமார் 14,000 பேர் வரை ஆசிரியர் உதவியாளர் போட்டி பரிட்சைக்கு விண்ணப்பித்திருப்பதாக அறிகிறோம்.
ஆசிரியர் உதவியாளர் போட்டி பரீட்சையை நடத்த வேண்டாம் என்ற இடைக்கால தடை உத்தரவு கல்வி அமைச்சின் செயலாளருக்கு எதிராகவே பெறப்பட்டிருக்கிறது. எனவே இந்த வழக்கை சரியான முறையில் எதிர்கொண்டு அல்லது சமரசமாக தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கையை கல்வி அமைச்சு எடுக்க வேண்டும். இதனால் விடயத்தை கல்வி அமைச்சர் என்ற வகையில் பிரதம மந்திரியின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன் இது தொடர்பில் சரியான தீர்மானம் ஒன்றை எடுப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
ஆசிரியர் உதவியாளர் போட்டி பரிட்சைக்கு விண்ணப்பித்தவர்கள் இது தொடர்பில் ஒரு தீர்வை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். எனவே தங்கள் மலையக மாணவர்களினதும், போட்டி பரீட்சைக்கு விண்ணப்பித்திருந்த மலையக இளைஞர் யுவதிகளினதும் எதிர்பார்ப்பை ஈடு செய்யும் வகையில் உங்கள் நடவடிக்கை அமையும் என எதிர்பார்க்கிறேன். என. காங்கிரஸ் கல்வியல் ஒன்றியத்தின் தலைவரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் பிரதமர் ஹரிணி அமரசேகருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.










