“ வாக்களித்த பிறகு வீடுகளுக்கு செல்லுங்கள். குழுக்களாக இணைந்து தேர்தல் விதிமீறல்களில் ஈடுபட வேண்டாம். அவ்வாறு ஈடுபட்டால் கைது செய்யப்படுவீர்கள். பாதுகாப்பு பணிகளுக்கு தேவை ஏற்படின் முப்படையினரும் தயார் நிலையிலேயே உள்ளனர்.” – என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.எல். ரத்நாயக்க கோரிக்கை விடுத்தார்.
அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார். அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ வாக்களித்த பின்னர் வீடுகளுக்குச் செல்லுங்கள். குழுக்களாக கூடி பொது இடங்களில் திரைகளில் பெறுபேறுகளை பார்த்தல் தடை செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பெறுபேறு வெளியாகும்போது பொது இடங்களில் பட்டாசு கொளுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் தடை செய்யப்பட்டுள்ளன.
வீடுகளில் இருங்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி ஊடாக தேர்தல் பெறுபேறுகளை அறிந்துகொள்ளுங்கள். தேர்தல் விதிமீறல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டால் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்படுவீர்கள்.
பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுவார்கள், தேவையேற்படின் முப்படைகளும் களமிறங்க தயார் நிலையில் உள்ளது.2ஆவது விருப்பு வாக்கை எண்ணவேண்டிவரின் இறுதி முடிவு அறிவிப்பு தாமதமாகலாம். எனவே, பொறுமை காக்கவும்.
வாக்கு உங்கள் உரிமை, பலம், அதனை கட்டாயம் பயன்படுத்துங்கள். இயலுமானவரை காலையிலேயே சென்று 21 ஆம் திகதி வாக்களிக்கவும்.” –என்றார்.
