வாய் தாடை உடையும் அளவுக்கு மாணவியை தாக்கிய ஆசிரியர்: அக்கரப்பத்தனை பகுதியில் கொடூரம்!
அக்கரப்பத்தனை பகுதியிலுள்ள தமிழ் பாடசாலையொன்றில் தரம் 11 இல் கல்வி பயிலும் மாணவி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த மாணவி வீட்டுப் பாடம் செய்யவில்லை என்பதற்காக அவரின் வாய்த்தாடை உடையும் அளவுக்கு விஞ்ஞானபாட ஆசிரியர் தாக்கியுள்ளார் என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆம் திகதி, பாடசாலை நேரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான மாணவி, அக்கரப்பத்தனை வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.
அம்மாணவியின் நிலைமை பாரதூரமாக இருந்துள்ளதால் அக்கரப்பத்தனை வைத்தியசாலை நிர்வாகம் பொறுப்பேற்க மறுத்துள்ளது, பின்னர் மாணவி நேரடியாக நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் இன்று வரை மாணவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தந்தை குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற நிலையில் தனது பிள்ளைகளின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு தாய் வெளிநாட்டில் பணிப்புரிகின்றார். மாணவி தாத்தா, பாட்டியில் பராமரிப்பிலேயே வளர்ந்து வருகின்றார்.
மாணவியை கொடூரமாக தாக்கிய ஆசிரியர் முன்னர் சேவையாற்றிய பாடசாலையில் இருந்து தண்டனைக்குரிய குற்றத்திற்காக இடமாற்றப்பட்டவர் எனக் கூறப்படுகின்றது.