நுவரெலியாவில் களனிவெளி பெருந்தோட்ட முகாமைத்துவ கம்பனியின்கீழ் இயங்கும் பீற்று தோட்டப் பிரிவிக்கு உட்பட்ட நேஸ்பி தோட்ட தொழிலாளர்கள், தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக கடந்த மூன்று நாட்களாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் மலையக பெருந்தோட்ட மக்களுக்கு கிடைக்கப்பட்டுள்ள 10 ஆயிரம் தனி வீடுகள் அமைக்கும் திட்டத்தில் ஆரம்ப கட்டமாக அமைக்கப்படவுள்ள 1300 தனி வீடு திட்டத்தில் நுவரெலியா நேஸ்பி தோட்ட தோட்ட மக்களுக்கும் தனி வீடுகள் கிடைக்கப்பெறவுள்ளன.
53 வீடுகளை அமைக்க, நேஸ்பி தோட்டத்தில் 05 ஏக்கர்களை கொண்டுள்ள இலக்கம் 02 தேயிலை மலையில் இடம் ஒதுக்கி தருமாறு வலியுறுத்தியே இப்போராட்டம் இடம்பெறுகின்றது.
நுவரெலியா நேஸ்பி தோட்டம் இயற்கை அழகை இரசிக்க கூடிய பார்வைக்கு உட்பட்ட தோட்டமாகும்.
இந்நிலையில் இந்திய அரசாங்க நிதி உதவியின் கீழ் 53 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் தொழிலாளர்கள் , அவ்வீடுகளை போக்குவரத்து, குடி நீர், மின்சாரம் மற்றும் சகல வசதிகளுக்கும் ஏதுவான இலக்கம் 02 தேயிலை மலையில் ஒரே கிராமமாக அமைத்து கொடுக்க இடத்தை ஒதுக்கி தருமாறு தோட்ட நிர்வாகத்திடம் வேண்டுகோள் முன் வைத்துள்ளனர்.
இவ்வாறு தொழிலாளர்கள் முன்வத்துள்ள கோரிக்கையை தோட்ட நிர்வாகம் அலட்சியப்படுத்தி வருவதுடன், மக்கள் வாழ்வதற்கு உகந்த பகுதியாக அல்லாத – தோட்ட மயானம் அமைந்துள்ள இலக்கம் (02 A) தேயிலை மலையில் வீடுகட்ட இடம் தருவதாக கூறியுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனை ஆட்சேபித்துள்ள தொழிலாளர்கள் தமக்கு உகந்த இலக்கம் (02) தேயிலை மலையில் தான் வீடுகள் கட்ட இடம் வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் உள்ளதுடன் தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்கும் வரை தாம் தொழிலுக்கு செல்வதில்லை எனவும் உறுதியாக தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில் நேஸ்பி தோட்டத்தில் பார்வைக்கு இடமான தேயிலை நிலங்கள் தனியார்களால் சுவீகரிக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய தொழிலாளர்கள் இத் தோட்டத்தில் பலர் வீடுகள் இன்றி தோட்ட வீடுகளுக்கு மாத வாடகை வழங்கி வசித்து வருவதாகவும் சுட்டிக்காட்டினர்.
இந்த நிலையில் விடயம் அறிந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மக்கள் பிரதிநிதிகளான சட்டத்தரணி சிவன் ஜோதி யோகராஜன், ஜே.வினோத்ஜ P உள்ளிட்ட இ.தொ.கா நுவரெலியா பணிமனை இயக்குனர் பி. ராஜாராம், மாவட்ட பிரதிநதி ரமேஸ் ஆகியோர் பணி பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ள மக்களை சந்தித்து பேச்சு நடத்தியதுடன்,தொழிலாளர்களை பணிக்கு செல்லுமாறும்,எதிர்வரும் திங்கட் கிழமை (26) அன்று தோட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வை பெற்று தருவதாகவும் தெரிவித்தனர்.
அத்துடன் இந்திய அரசாங்கம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்து இந்த 10 ஆயிரம் வீட்டு திட்டத்தை வழங்கியுள்ளது. எனவே இ.தொ.காவை பலப்படுத்தும் நேஸ்பி தோட்ட மக்கள் எதிர் கட்சிகளின் மகுடி ஊதலுக்கு மயங்கி வீதிக்கு இறங்காது ஒருமுகமாக இருங்கள் நிச்சயம் மக்களுக்கு ஏற்ற இடத்தில் வீடுகள் அமைக்க இ.தொ.கா நடவடிக்கை எடுக்கும் என சட்டத்தரணி சிவன் ஜோதி யோகராஜன் தெரிவித்தார்.
அதேநேரத்தில் இந்திய அரசாங்கம் எம் மக்களுக்கு வழங்கியுள்ள 10 ஆயிரம் வீடுகளுக்கு பிள்ளையார் சுழி இட்டது கணேசன் இல்லை அமரர் ஆறுமுகம் தொண்டமான். ஆகையால் மக்கள் பயப்பட தேவையில்லை நேஸ்பி மக்கள் வரும்பிய இடமும் ,வீடும் ஜீவன் தொண்டமான் பெற்று தருவார் எனவும் தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க சீத்தா எளிய சீதையம்மன் ஆலயத்திற்கு (21) விஜயத்தை மேற்கொண்ட அமைச்சர் ஜீவன் தொண்டமானை நேஸ்பி தோட்ட மக்கள் கிறேகறி தெப்பக்குள பகுதியில் சந்தித்துள்ளனர். இதன்போது தோட்ட நிர்வாகத்திடம் பேசி இடத்தை பெற்று தாருங்கள் வீடுகள் கட்ட அடிக்கல் நாட்டுகிறார் என அமைச்சர் கூறியதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
ஆ.ரமேஷ்










