நுவரெலியா மாவட்ட மோட்டார் போக்குவரத்து அலுவலகத்தால், நுவரெலியா வீதியில் நேற்று வாகன பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
நுவரெலியா மாவட்ட மோட்டார் போக்குவரத்து அலுவலகத்தின் தலைமை பரிசோதகர் ஜாலிய பண்டார தலைமையில் இதற்குரிய நடவடிக்கை இடம்பெற்றது. நுவரெலியா போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின் அதிகாரிகளின் இந்நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
குறுந்தூர, நெடுந்தூர சேவையில் ஈடுபடும் பேருந்துகள், தனியார் பேருந்துகள் மற்றும் நுவரெலியா வீதியில் செல்லும் அனைத்து வாகனங்களும் இதன்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
குறித்த பரிசோதனையின் போது, பேருந்துகள் பயணிகள் போக்குவரத்து சேவைகளுக்கு ஏற்ற நிலையில் உள்ளனவா? என்பது கண்காணிக்கப்பட்டது.
மொத்தமாக 40 வாகனங்கள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், 22 வாகனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. 10 இபோச பஸ்கள், 8 தனியார் பஸ்கள் மற்றும் 4 லொறிகளும் இதில் அடங்குகின்றன.
பொது போக்குவரத்து வாகனங்களில் விபத்துகள் ஏற்படக்கூடிய வகையில் பொருத்தப்பட்டுள்ள அபாயகரமான மேலதிக உதிரிபாகங்களை அகற்றவும் சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது,
நுவரெலியா – கண்டி பிரதான வீதி மற்றும் நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் இப்பரிசோதனை இடம்பெற்றது.
வி.தீபன்ராஜ்