வெனிசுலா மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு ரஷ்யா மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
போதைப்பொருள் பயங்கரவாதத்தை வெனிசுலா அரசு ஊக்குவிக்கிறது என்று அமெரிக்கா நீண்ட நாட்களாக குற்றம் சாட்டி வருகிறது.
அதற்கு காரணமான, ஜனாதிபதி மதுரோ உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி டிரம்ப் கூறி வந்தார்.
இந்நிலையில், இன்று அதிகாலை வெனிசுலா தலைநகர் கராகஸ், மிரண்டா, அராகுவா உள்ளிட்ட பகுதிகளில் அமெரிக்க படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தின.
ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைப்பிடித்த தங்கள் படையினர், அவரை நாட்டை விட்டு வெளியேற்றியதாகவும், தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.
மதுரோ வெளியேற்றப்பட்ட நிலையிலும், வெனிசுலா மீதான தாக்குதலை அமெரிக்க ராணுவம் நிறுத்தவில்லை.
ராணுவ நிலைகள் மீது தொடர்ந்து அமெரிக்க விமானப்படை குண்டு வீசி வருகிறது, இதை எதிர்கொள்ளும் வகையில், வெனிசுலா அரசு அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது. இதனிடையே, வெனிசுலா மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு ரஷ்யா மற்றும் ஈரான் உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இது குறித்து ரஷ்யா கூறியதாவது; கடந்த சில தினங்களாக வெனிசுலாவுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் போலவே, இன்று அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு எந்தவொரு உறுதியான காரணமும் இல்லை.
இது சர்வதேச சட்டத்தை மீறும் செயல். அமெரிக்காவுக்கு வெனிசுலா எந்தவொரு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை. இந்த தாக்குதல் மேலும் விரிவடையக் கூடாது, எனக் கூறியுள்ளது.
ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தரப்பில் கூறியதாவது; வெனிசுலா மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல், ஐநா அடிப்படைக் கோட்பாடுகளையும், சர்வதேச சட்டத்தின் அடிப்படை விதிகளையும் மீறும் செயலாகும். வெனிசுலா நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறும் இந்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். சர்வதேச பாதுகாப்பை வலியுறுத்தும் அனைத்து நாடுகளும் அமெரிக்காவின் தாக்குதலுக்கு கண்டனத்தை தெரிவிக்க வேண்டும், இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இதேபோல, கியூபா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளும் அமெரிக்காவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
தயார் நிலையில் கொலம்பியா
வெனிசுலா எல்லையில், தங்கள் நாட்டு ராணுவம் நிறுத்தப்படும் என்று அண்டை நாடான கொலம்பியா அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் தாக்குதலை தொடர்ந்து வெனிசுலா மக்கள், தங்கள் நாட்டுக்கு அகதிகளாக வர வாய்ப்புள்ளதாக கருதும் கொலம்பியா, அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. இந்த இரு நாடுகளும், 2 ஆயிரம் கிலோமீட்டர் நீள எல்லையை பகிர்ந்து கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரோவிடம் விசாரணை
அமெரிக்க படைகளால் கைது செய்யப்பட்டுள்ள வெனிசுலா ஜனாதிபதி மதுரோ, 2020ம் ஆண்டில் நியூயார்க்கில் பதியப்பட்ட போதைப்பொருள் பயங்கரவாதம் தொடர்பான வழக்கில் குற்றவாளியாக விசாரிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிகாரத்தில் யார்?
ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில், வெனிசுலா யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது, ராணுவத்தினருக்கு உத்தரவு பிறப்பிப்பது யார் என்பது பற்றி குழப்பமான சூழல் நிலவுகிறது.
