வெனிசுலாமீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பைக் கண்டித்து கொழும்பில் நேற்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது இலங்கை அரசாங்கத்தின் அணுகுமுறை தொடர்பிலும் கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது.
வெனிசுலாமீதான தாக்குதலை வெளிப்படையாகக் கண்டிக்க முடியாத நிலையில் இடதுசாரி எனக் கூறிக்கொள்ளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உள்ளதென விமர்சனம் முன்வைக்கப்பட்டது.
முன்னிலை சோசலிசக் கட்சியினர் உள்ளடங்கலாக மக்கள் போராட்ட இயக்கத்தினரால் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுரகத்துக்கு முன்னால் நேற்று மாலை இப்போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
அரசியல் பிரமுகர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் இதில் பங்கேற்றிருந்தனர். அமெரிக்க தூதரகத்துக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.
எண்ணெய் வளம்மீதான பேராசையாலேயே அமெரிக்கா இவ்வாறு செயல்படுகின்றது. ட்ரம்பின் அடாவடிக்கு உடன் முடிவு கட்ட வேண்டும் எனவும் கோசம் எழுப்பட்டது.
ஈராக், ஈரான், லிபியா, காசா என எல்லா இடங்களிலும் ஆக்கிரமிப்பு நடக்கின்றது. ஆனால் ஐநா சபை மௌனம் காக்கின்றது.
வெனிசுலாமீதான தாக்குதலை கண்டிக்க முடியாத நிலையில் இலங்கை அரசாங்கம் உள்ளது. அமெரிக்காவுடன் கைச்சாத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தம் இதற்கு காரணமா? எனவும் முன்னிலை சோசலிசக் கட்சியின் சந்தேகம் வெளியிட்டனர்.
