” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான தொழில் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கும். இதற்கான பொறுப்பை நாம் ஏற்கின்றோம்.” – என்று இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. இது பெரும் வெற்றியாகும். இதற்கு தற்போது பலர் உரிமை கோருகின்றனர். ஆனால் சம்பள உயர்வை யார் பெற்றுக்கொடுத்தது என்பது மக்களுக்கு தெரியும்.
750 ரூபா நாட் சம்பளமாக கிடைக்கும்போது செய்தவேலையைதான் தற்போதும் செய்ய வேண்டும். தொழில் சுமைகள் அதிகரிக்கப்படக்கூடாது. அவ்வாறு அதிகரிக்கப்பட்டால் அதற்கு எதிராக நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே. முன்னரை செய்த வேலையைவிடவும் துளியளவேனும் அதிகம் செய்யவேண்டாம் என தொழிலாளர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.
அத்துடன், தொழிலாளர்களுக்கான வேலை நாட்கள் குறைக்கப்பட்டால் அதனை எவ்வாறு தொழிற்சங்க ரீதியில் எதிர்கொள்ள வேண்டும் என்பதும் எமக்கு தெரியும். வேலை நாட்கள் குறைக்கப்பட்டால் ஒரு நாளைக்கு 2 கிலோ கொழுந்துதான் எடுப்போம். இது தொடர்பில் கம்பனிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. எனினும், வேலை நாட்கள் குறைக்கப்படாது. இதற்கான பொறுப்பை நாம் ஏற்கின்றோம்.” – என்றும் செந்தில் தொண்டமான் குறிப்பிட்டார்.










