ஹொரோயின் போதைப்பொருளுடன் இருவர், பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி, பதுளை பஸ்ஸொன்றில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகின்றது என பதுளை குற்றத்தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சிவில் உடையில் பஸ் தரிப்பிடத்துக்குச்சென்று, பொலிஸார் குறித்த பஸ்ஸை சோதனையிட்டனர்.
இதன்போது 28 வயதுடைய நபர் ஒருவர், பதுளை பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபரிடம் பொதி செய்து விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளை கொடுக்க முற்பட்ட வேளையில் பதுளை குற்றத்தடுப்பு பிரிவினரால் கண்டியிலிருந்து வருகை தந்த நபர் மடக்கி பிடிக்கப்பட்டதோடு அவரிடமிருந்து 6350 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நபரிடம் ஹெரோயினை பெற்றுக்கொள்ள வந்த 34வயதுடைய நபர் தப்பிச்செல்ல முற்பட்ட வேளை பொலிஸாரினால் துரத்தி பிடிக்கப்பட்டார்.
குறித்த நபரிடம் சோதனையை மேற்கொண்ட போது அவரிடம் இருந்து 150 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா
