100 ரூபாவுக்காக 7 சிறுவனை கூரிய ஆயுதத்தால் கடுமையாக தாக்கி காயப்படுத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கந்தகெட்டிய பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது காட்டுப்பகுதியில் மறைந்திருந்த குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேகநபர் பொலிஸார்மீது கற்களை வீசித் தாக்கியதாகவும், தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் அவர் கல்லில் இருந்து விழுந்து காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் மீகஹகிவுல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சந்தேக நபரின் தாக்குதலுக்கு இலக்கான சிறுவன் பலத்த வெட்டுக்காயங்களுடன் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 7 மணித்தியால சத்திரசிகிச்சையின் பின்னர் காப்பாற்றப்பட்டுள்ளான்.
குழந்தை தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அப்பாவின் கைப்பேசிக்கு மீள்நிரப்பு அட்டை ஒன்றை வாங்குவதற்காக பாதிக்கப்பட் சிறுவன் கையில் 100 ரூபாயுடன் கடையொன்றுக்கு சென்றுள்ளான்.
அப்போது மர்மநபர் சிறுவனை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
சிறுவன் வைத்திருந்த 100 ரூபாயை கேட்டு அந்த நபர் குழந்தையை தாக்கியிருக்கலாம் என சிறுவனின் தாய் தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் கடந்த சில நாட்களாக கத்தி ஒன்றுடன் அப்பகுதியில் சுற்றித் திரிவதாகவும், அந்தக் கத்தியால் சிறுவனைத் தாக்கியிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சிறுவன் வைத்திருந்த 100 ரூபாய், கடை அருகே தரையில் கிடந்துள்ள நிலையில் பொலிஸார் அதனை கைப்பற்றியுள்ளனர்.










