1000 தோட்டக் குடியிருப்புகளை புனரமைக்க நடவடிக்கை

ஆயிரம் பெருந்தோட்டக் குடியிருப்புகளை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

Clean Sri Lanka வேலைத்திட்டத்திற்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அதன் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.

75-இற்கும் மேற்பட்ட குடியிருப்பு தொகுதிகள் இதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அதற்கமைய, பெருந்தோட்டத் துறையுடன் தொடர்புடைய நுவரெலியா, கண்டி, பதுளை, இரத்தினபுரி, மொனராகலை உள்ளிட்ட மாவட்டங்களில் காணப்படும் தோட்டக் குடியிருப்புகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.

குறித்த தோட்டக் குடியிருப்புகளை சுத்திகரித்து புனரமைப்பு செய்து வர்ணம் பூசி சாதாரணமான முறையில் வாழக்கூடிய நிலைமையை ஏற்படுத்துவதே இதன் ​நோக்கமாகும் என அவர் கூறினார்.

இந்த தோட்டக் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு அடையாள அட்டை வழங்குதல், பிறப்புச்சான்றிதழைப் பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நன்றி – நியுஸ்பெஸ்ட்

Related Articles

Latest Articles