” பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் இதொகாவினர் நடத்திய பேச்சுவார்த்தையின் பிரகாரம், 750 ரூபாய் அடிப்படைச் சம்பளம் தான் ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மாறாக, வேலை அதிகரிக்கப்படவில்லை. ஆனால் சில தனியார் பெருந்தோட்டக் கம்பனிகள், தொழிலாளர்களுக்கான வேலையை அதிகரிக்கப் பார்க்கின்றன. இதனை முற்றாக நாம் எதிர்க்கிறோம்.
750 ரூபாய் அடிப்படைச் சம்பளத்துக்காக என்ன வேலை செய்யப்பட்டதுவோ, அதுதான் ஆயிரம் ரூபாய்க்கும் செய்யப்பட வேண்டும். அதற்கு மேலதிகமாகச் செய்யப்படும் வேலைகளுக்கான (மேலதிகமாகப் பறிக்கப்படும் கொழுந்து) மேலதிகக் கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும்”.
இவ்வாறு பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான செந்தில் தொண்டமான் வலியுறுத்தினார்.
பிரதமர் அலுவலகத்தில் இன்று (27) இடம்பெற்ற விசேட ஊடகச் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், அரசாங்கம் என்ற ரீதியில், தொழிலாளர்களைப் பாதுகாக்கவும் அவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதிலும் அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது. ஒப்பந்த விடயத்தில், தொழிற்சங்க ரீதியில் வழங்கப்படக்கூடிய அழுத்தங்களை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தொடந்து வழங்கிக்கொண்டிருக்கும்.
சம்பள நிர்ணய சபையினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு, அரசாங்கப் பெருந்தோட்டங்களின் கீழ் பணியாற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவியது. இது விடயத்தில் உடனடித் தீர்வைப் பெற்றுக்கொடுக்குமாறு, பிரதமர் மஹிந்த ராஜபக்ச உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார். அத்துடன், அதற்கான வேலைத்திட்டங்களையும் அவர் முன்வைத்துள்ளார்.
அதன்படி, கடந்த 23ஆம் திகதி வௌ்ளிக்கிழமையன்று, கண்டி (எஸ்.பி.சி) மற்றும் மாத்தளை மாவட்டங்களைச் சேர்ந்த 16 தோட்டங்களில் பணியாற்றும் 3,800 தொழிலாளர்களுக்கு, ஆயிரம் ரூபாய்ப்படி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. தவிர, இந்தத் தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பறித்த மேலதிகக் கொழுந்துகளுக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டுள்ளன.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் வேண்டுகோளுக்கிணங்க, பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தலையீட்டில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் நாள் சம்பள அதிகரிப்பு தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், சில தனியார் பெருந்தோட்டக் கம்பனிகள், அதிக இலாபத்தைப் பெறுவதிலேயே குறியாக இருக்கின்றன தவிர, தொழிலாளர்களுக்காக அரசாங்கம் நிர்ணயித்துள்ள சம்பள அதிகரிப்பை எவ்வாறு மாற்று வழிகளில் முறியடிக்கலாம் என்ற எண்ணத்திலும் செயற்பட்டு வருகின்றன.
இது தொடர்பில் பிரதமரின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. அதன்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலதிக கொடுப்பனவு விடயத்தில், 750 ரூபாய்க்கு எந்தளவுத் தொகையை மேலதிகமாக வழங்கினார்களோ, அதை ஆயிரம் ரூபாய்க்கும் வழங்கப்பட வேண்டும்.
பெருந்தோட்டக் கம்பனிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கூட்டு ஒப்பந்தத்தில் என்னென்ன அம்சங்கள் காணப்பட்டனவோ, அவை அவ்வாறே தொடர்ந்தும் அமுலில் இருக்கின்றன. எவ்வாறெனினும், கூட்டு ஒப்பந்தம் எனும் கொள்கை ரீதியிலான செயற்பாடுகளிலிருந்து, தாம் ஒருபோதும் விலகப்போவதில்லை. ” என்றார்.
