பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்க மறுக்கும் பெருந்தோட்ட நிறுவனங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.
தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க தரப்புகளில் இருந்து முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட ஆணையாளர் ஒருவர் தலைமையிலேயே இந்த குழு அமையும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.
” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு எதிராக பெருந்தோட்ட நிறுவனங்கள் மேன்முறையீடு செய்து வழக்கு தாக்கல் செய்துள்ளன.
எனினும், ஆயிரம் ரூபா வேதனம் வழங்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு நீதிமன்றினால் இதுவரையில் தடைவிதிக்கப்படவில்லை. இவ்வாறான பின்னணியில் சில பெருந்தோட்ட நிறுவனங்கள் நாளாந்தம் ஆயிரம் வேதனம் வழங்குவதில் இருந்து விலகியுள்ளன.” -என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
