50 ஆவது தேசிய விளையாட்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற நுவரெலியா மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான தடகளப் போட்டியில், நுவரெலியா பிரதேச செயலகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட ஸ்கிராப் தோட்டத்தைச் சேர்ந்த எம். மதன்ராஜ் பிரியதர்ஷன், 10,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
கிராம சேவகர் மட்டத்திலான போட்டிகளில் தனது திறமையை வெளிப்படுத்தி வெற்றிபெற்ற அவர், தொடர்ந்து பிரதேச மற்றும் மாவட்ட மட்டப் போட்டிகளில் முன்னேறி, தற்போது தேசிய விளையாட்டு விழாவின் மாவட்டங்களுக்கு இடையிலான போட்டியில் 10,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் முதலிடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை தனதாக்கியுள்ளார்.
தனது விடாமுயற்சி, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் மூலம் இந்த வெற்றியைப் பெற்றுள்ள மதன்ராஜ் பிரியதர்ஷன், நுவரெலியா பிரதேசத்திற்கும், மலையகத்திற்கும், குறிப்பாக தான் பிறந்து வளர்ந்த இஸ்கிராப் தோட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
அவரது இந்த வெற்றி, எதிர்காலத்தில் தடகளத் துறையில் சாதிக்க விரும்பும் மலையக இளைஞர்களுக்கு ஒரு சிறந்த ஊக்கமாக அமைந்துள்ளது.
தங்கப் பதக்கம் வென்று நுவரெலியாவுக்கு பெருமை சேர்த்த வீரர் மதன்ராஜ் பிரியதர்ஷனுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!
மேலும் பல வெற்றிகளைப் பெற்று, தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு பெருமை சேர்க்க வாழ்த்துகிறோம்.
