ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இரு தடவைகள் ஆயுதம் ஏந்தியவர்கள்தான் தற்போது ஆட்சிக்கு வந்துள்ளனர். எனவே, நாட்டு மக்கள் பொதுத்தேர்தலின்போது ஜனநாயகம் பற்றியும் சிந்திக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ புலிகள் அமைப்பினர் ஆயுதம் ஏந்துவதற்கு முன்னர் ஆயுதம் ஏந்தியவர்கள்தான் ஜே.வி.பியினர். இரு தடவைகள் அவர்கள் கிளர்ச்சி செய்தனர். அதனால்தான் அரசியல் வாதிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க நேரிட்டது. ஜே.வி.பியினரிடமிருந்து உயிரை பாதுகாத்துக்கொள்ளவே அன்று பொலிஸ் பாதுகாப்பை கோரினோம்.
இன்று எமக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. ஆனால் எதற்காக பொலிஸ் பாதுகாப்பு பெறப்பட்டது என்ற வரலாற்றை மறக்ககூடாது.
தேர்தலுக்கு பின்னர் நாட்டில் குழப்பம் இருக்கவில்லை. இதனை மதிக்கின்றோம். இப்படியே ஜனநாயக வழியில் ஜே.வி.பி. பயணிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை.
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியை இலக்கு வைத்தே போட்டியிடுகின்றோம். 113 இற்கு மேற்பட்ட ஆசனங்களை எதிர்பார்க்கின்றோம். நாட்டின் ஜனநாயகம் மற்றும் நாடாளுமன்ற முறைமையை பாதுகாக்க மக்கள் வாக்களிப்பார்கள் என நம்புகின்றோம்.
ஆயத பலம் ஊடாக இரு தடவைகள் ஆட்சியைக் கைப்பற்ற முற்பட்டவர்களிடம்தான் தற்போது ஆட்சி ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே, ஜனநாயகம் பற்றியும் மக்கள் சிந்திக்க வேண்டும்.” – என்றார்.










