கொரோனா தொற்றாளர்கள் 119பேர் தப்பிச் சென்றுள்ளனர் என வெளியாகியுள்ள தகவல் உண்மைக்கு புறம்பானது என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஆடை தொழிற்சாலை கொரோனா வைரஸ் கொத்தணி பரவலுடன் தொடர்புடைய மற்றும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதியாகியுள்ள 119 பேர் தலைமறைவாகியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இவை உண்மைக்கு புறம்பானவை.
ஆடை தொழிற்சாலையில் கொரோனா வைரஸ் பரவல் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன
அதன்போது வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்கள் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஏனையவர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த நபர்களுடன் தொடர்பினை பேணியதாக கருதப்படும் நபர்கள் தொடர்பிலும் தகவல்கள் திரட்டப்பட்டு தற்போது அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுடன் தொடர்பு கொண்டவர்கள் எவரேனும் இன்னமும் சமூகத்தில் இருப்பார்களாயின் அவர்களை உடனே தொடர்பு கொண்டு தகவல்களை வழங்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம். அதற்கமைய வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படும் 119 பேர் தலைமறைவாகியுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி உண்மைக்கு புறம்பானது என்றும் அவர் கூறியுள்ளார்.
