பசறை பகுதியிலுள்ள தோட்டப்பகுதியொன்றில் 13 வயது சிறுமியொருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்28 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னரும் இவர் சீர்கேடான விடயங்களில் ஈடுபட்டவர் என குற்றச்சாட்டு எழந்துள்ளது.
கடைசியாக பஸ்ஸொன்றில் நடத்துனராக பணியாற்றி வந்துள்ளார்.
நமுனுகுலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டமொன்றில் வசிக்கும் சிறுமி கடந்த 21 ஆம் திகதி கோழி தீணி வாங்குவதற்காக பசறை நகருக்கு சென்றுள்ளார்.
இவ்வாறு நகருக்கு சென்ற தனது மகள் வீடு திரும்பவில்லை என பசறை பொலிஸ் நிலையத்தில் கடந்த 21 ம் திகதி இரவு 10.05 மணியளவில் குறித்த சிறுமியின் தந்தை முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பசறை பொலிஸார், பசறை , டெமேரியா மீரியபெத்த – ராக்கமலை பகுதியில் லயன் குடியிருப்பு வீடொன்றில் இருந்து சிறுமியை மீட்டனர்.
பின்னர் சிறுமியிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது, தான் பசறை நகருக்கு வந்த போது , பேருந்து ஒன்றின் நடத்துநருடன் சிநேகிதம் ஏற்பட்டதாகவும், பின்னர் குறித்த நபரின் வேண்டுகோளுக்கு இணங்க அவரின் வீட்டுக்கு சென்றதாகவும் , நபரின் வீட்டில் யாரும் இருக்கவில்லை எனவும், இதன்போது குறித்த நபர் தன்னுடன் பலமுறை தகாத உறவில் ஈடுபட்டதாகவும் பொலிஸாரிடம் சிறுமி கூறியுள்ளார்.
சிறுமி பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக பரிசோதனைக்காக பதுளை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
தலைமறைவாகி இருந்த சந்தேக நபர் பதுளை பேருந்து தரிப்பிடத்தில் இருப்பதாக பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஈ.எம்.பியரட்ணவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பொலிஸ் குழுவினர் உடன் பதுளை பேருந்து தரிப்பிடத்திற்கு விரைந்து , பதுளை பேருந்து தரிப்பிடத்தில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பதுளை பொலிஸ் நிலைய அதிகாரிகளின் உதவியுடன் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரை நேற்றைய தினம் (24 ) பசறை நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
ராமு தனராஜா