” உயிரை தியாகம்செய்தே ஒற்றையாட்சி முறைமையை பாதுகாத்தோம். எனினும், 13 ஆவது திருத்தச்சட்டம் பலவந்தமாக திணிக்கப்பட்டது. 13 இல் உள்ள அதிகாரங்கள் வடக்கிலுள்ள இனவாத அரசியல்வாதிகளின் கைகளுக்கு முழுமையாக சென்றுவிட்டால் தனிஈழம் அமைவதை தடுக்கமுடியாது. எனவே, 13 இற்கு முடிவு கட்டவேண்டும்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
அத்துடன், புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவரே சம்பந்தன் எனவும் அவர் விமர்சித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பண்டையகாலம் தொட்டு ஒற்றையாட்சி முறைமையையும், எமது அடையாளங்களையும் எமது முதாதையர்கள் பாதுகாத்து வந்தனர். உயிர் திகாயமும் செய்துள்ளனர். இவ்வாறு பாதுகாக்கப்பட்டுவந்த நாட்டிலேயே பலவந்தமாக திணிக்கப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டமூலம் சமஷ்டி கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கப்பட்டது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஆளுநர் இல்லாவிட்டால் சமஷ்டி அமுலுக்குவரும் நிலைமை காணப்படுகின்றது.
13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படும் என சஜித் கூறுகின்றார். அவ்வாறு நடைபெற்றால் ஒற்றையாட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும். தமிழ் மக்களுக்கு அநீழி இழைக்கப்படுகின்றது என்பதை எவராவது உரிய வகையில் உறுதிப்படுத்தினால் 13 இற்கு அப்பால்செல்வதற்குகூட தயார் என்றே மஹிந்த ராஜபக்ச கூறியிருந்தார். 13 பிளஸ் அமுல்படுத்தப்படும் என அவர் அறிவிக்கவில்லை என்றே நான் நினைக்கின்றேன்.
தமிழர்களுக்கு இந்த நாட்டில் அநீதி இழைக்கப்படவில்லை. தென்பகுதிகளில் உள்ள பலக்கலைக்கழகங்களில் தமிழ் மாணவர்கள் சுதந்திரமாக கல்வி கற்கின்றனர். ஆனால், வடக்கில் எமது மாணவர்களுக்கு அவ்வாறானதொரு நிலை இல்லை. சிங்களவர்களுக்கு வடக்கில் வாழமுடியாது என விக்கேஸ்வரன் குறிப்பிடுகின்றார். அவர் சிங்களவர்களுடன்தான் வாழ்ந்தார், படித்தார், பதவியில் இருந்தார். பிள்ளைகளையும் சிங்களவர்களுக்கே மணம் முடித்துவைத்தார்.
இப்படியான இனவாத நபரொருவரின் கைகளுக்குள் 13ஆவது திருத்தச்சட்டத்திலுள்ள அதிகாரங்கள் சென்றால் என்ன நடக்கும்? பொலிஸ், காணி மற்றும் தொல்லியல் தொடர்பான அதிகாரங்களும் உள்ளன. எனவே, இப்படியானவர்களின் கைகளுக்கு அதிகாரங்கள் சென்றால் நமக்கு நாடு மிஞ்சுமா? தனி ஈழம் நோக்கி பயணிப்பதை தடுத்து நிறுத்த முடியுமா? எனவே, 13ஆவது திருத்தச்சட்டத்தை நிராகரிப்பதற்கு மக்களுக்கு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. ” – என்றார்.