மாகாண சபை தேர்தல்களை நடத்துவது ஜனநாயகத்தின் இன்றியமையாத அங்கமாகும் என்று குறிப்பிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான தனது உறுதியான அரசியல் அர்ப்பணிப்பை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும், இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான கனடா உயர்ஸ்தானிகரான இசபெல் கெத்தரின் மார்ட்டினுக்கும் இடையிலான விசேட சந்திப்பு கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் ஜனநாயக ஆட்சி, மனித உரிமைகள் மற்றும் நீடித்த இன நல்லிணக்கம் தொடர்பாகவும் இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
இதன்போது, இலங்கை எதிர்கொள்ளும் பேரண்டப் பொருளாதார சவால்கள் குறித்தும், ‘டித்வா’ சூறாவளிப் பேரழிவுக்குப் பின்னர் நாட்டைப் பாதித்துள்ள சமூக பொருளாதார சவால்கள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
நாட்டில் தற்சமயம் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் நலிவடைந்த சமூகங்களுக்குத் துரித நிவாரணம், மறுசீரமைப்பு மற்றும் வாழ்வாதார மீட்சிக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார். அத்துடன், நாடாக மீண்டும் தலைநிமிர்வதற்கும், சேதமடைந்த சொத்துக்களைப் புனர்நிர்மாணம் செய்வதற்கும் உலகளாவிய ரீதியில் உதவிகள் கிடைக்க வேண்டும் என்று தெரிவித்த அவர், சர்வதேச நாணய நிதியத்திடம் தான் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாகவும் இங்கு மீண்டும் சுட்டிக்காட்டினார்.
கனடாவின் வலுவான காலநிலை, நிதி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
விசேடமாக, காலநிலை – ஸ்மார்ட் – கமத்தொழிலை வலுப்படுத்துதல், நிலைபேறான காணி பயன்பாடு மற்றும் நீரேந்து முகாமைத்துவத்தை மேம்படுத்தல் ஆகியவற்றோடு, இலங்கையில் வறண்ட காலநிலையைக் கொண்ட உலர் வலயப் பகுதி முழுவதும் வாழும் பெண் விவசாயிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, கனேடிய டொலர் 5 மில்லியன் நிதியொதுக்கீட்டில் முன்னெடுக்கப்படும் “ஆக்ஸஸ் ஶ்ரீலங்கா” திட்டத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.










