1,550 கிலோ எடையுள்ள வாகனத்தை தலைமுடியால் கட்டி இழுத்து வயோதிபர் சாதனை

யாழ். சாவகச்சேரி மட்டுவில் பகுதியைச் சேர்ந்த செ.திருச்செல்வம் தனது 60ஆவது வயதில் இரண்டாவது உலக சாதனையை நிகழ்த்தி சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் தனது சாதனையை நிலைநிறுத்தியுள்ளார்.

இன்று (15) காலை சாவகச்சேரி பஸ் நிலையத்தில் மேற்படி உலக சாதனை நிகழ்வு ஆரம்பித்திருந்தது.

இதன்போது ஆயிரத்து 550 கிலோகிராம் எடை கொண்ட வாகனத்தை 19 நிமிடம் 45 செக்கன்களில் ஆயிரத்து 500 மீற்றர் தூரம் தனது தலைமுடியின் உதவியை மாத்திரம் பயன்படுத்தி இழுத்து உலக சாதனையைப் பதிவு செய்துள்ளார்.

மேற்படி நிகழ்வில் விருந்தினர்களாக யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் சாந்தாதேவி, சமூகசேவகர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி,தென்மராட்சி அபிவிருத்திக்கழக தலைவர் அ.கயிலாயபிள்ளை, ஓய்வுநிலை கிராம உத்தியோகத்தர் க.வேலாயுதபிள்ளை, முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் தி.தங்கவேலு மற்றும் மூச்சு திரைப்பட இயக்குநர் கலைஞானி குமரநாதன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

மேலும் விழாவிற்கான அனுசரணையாளரான நியூ வி.எம்.கே நகை மாட உரிமையாளர்,சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இணைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

உலக சாதனையாளர் செ.திருச்செல்வம் கடந்த வருடம் தனது முகத் தாடியின் உதவியோடு 1500கிலோ எடை கொண்ட வாகனத்தை 7 நிமிடங்களில் 400மீற்றர் தூரம் இழுத்து உலக சாதனை படைத்திருந்தமை குறிப்பிடதக்கது.

Related Articles

Latest Articles