நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி உட்பட 11 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 4,151 குடும்பங்களைச் சேர்ந்த 16,345 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தங்களால் இதுவரையில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.
மேலும், இயற்கை அனர்த்தங்கள் காரணமாக ஒரு வீடு முழுமையாகவும், 581 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
பாதிக்கப்பட்டவர்களில் 682 குடும்பங்களைச் சேர்ந்த 2,504 பேர் 43 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மத்திய மாகாணத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் 7,288 பேரும், கண்டி மாவட்டத்தில் 7,288 பேரும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.










