இலங்கையில் இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்றுள்ள 17 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் தொடர்பில் 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான புத்திக மனதுங்க மேற்படி தகவலை வெளியிட்டார்.
இதன்போது அவர் மேலும் கூறியவை வருமாறு,
‘ நாட்டில் இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்றுள்ள 17 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுள் 11 சம்பவங்கள் பாதாள குழுக்களுடன் தொடர்புபட்டவை. ஏனைய 6 சம்பவங்களும் நபர்களுக்கிடையிலான மோதலால் ஏற்பட்டவையாகும்.
இந்த 17 சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அந்தவகையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள், ஒத்துழைப்பு வழங்கியவர்கள் என மொத்தம் 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், இக்காலப்பகுதியில் ரி – 56 துப்பாக்கிகள் 4 உட்பட மொத்த 11 துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன், 5 மோட்டார் சைக்கிள்கள், 2 கார்கள், வேனொன்று மற்றும் இரு ஆட்டோக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.”- என்றார்.










