1,700 ரூபா சம்பளம் தொழிலாளர் கரங்களை சென்றடையும் வரை ஓயமாட்டோம்!

இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு எதிரான விமர்சனங்களுக்கும் அவமானங்களுக்கும் மத்தியிலேயே 1700 ரூபாய் சம்பளம் அடையப் பெற்றுள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

” தோட்டத் தொழிலாளர்களுக்கு கடந்த காலங்களில் சம்பள உயர்வாக 1700 ரூபா அறிவிக்கப்பட்டது. அதன் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் பட்டாசு கொளுத்தி பால் சோறு சமைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள்.

அப்போது அதற்கு தாங்களும் பங்களித்ததாக மகிழ்ச்சியில் பங்கு போட்டுக் கொண்ட பலர் பின்னர் பெருந்தோட்ட கம்பெனிகள் உயர்நீதிமன்றத்திற்கு சென்ற பின் இது அரசாங்கத்தினதும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்சினதும் நாடகம் என விமர்சனம் செய்தனர்.

காங்கிரஸின் உயர்மட்ட உறுப்பினர்கள் சமூக ஊடகங்கள் மூலமாக அவமானப்படுத்தப்பட்டனர். சமூகத்துக்காக ஒரு நோக்கத்தின் அடிப்படையில் செயல் படுகின்ற போது விமர்சனங்களையும் அவமானங்களையும் ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு எப்படியும் எமது தொழிலாளர் சகோதரர்களுக்கு 1700 ரூபாய் பெற்றுக் கொடுப்பது என்ற உறுதியோடு காங்கிரசின் சகல மட்ட உறுப்பினர்களும் செயல்பட்டனர்.

இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சம்பள நிர்ணய சபை ஊடாக எமது இலக்கை எட்ட முடிந்ததையிட்டு மகிழ்ச்சி அடைகிறோம். இதற்காக நம்பிக்கையுடன் பொறுமை காத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்கள் , மற்றும் தொழிலாளர் சகோதரர்கள் ஆகியோருக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதே நேரத்தில் இந்த 1700 ரூபா சம்பள அதிகரிப்பு அதிகரிப்பு தோட்டத் தொழிலாளர்களின் கரங்களுக்கு சென்றடையும் வரை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அர்ப்பணிப்போடு செயல்படும் . எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles