“தற்போதைய சூழ்நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபாவை வழங்க முடியாது.” என பெருந்தோட்ட நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளரான ரொஷான் இராஜதுரை தெரிவித்துள்ளார்.
“ ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்துடன் மேலதிக கொடுப்பனவுகளை வழங்க முடியும் என ஜனாதிபதியும் பகிரங்கமாக கூறியுள்ளார். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கொன்று விசாரணையில் உள்ளதால் சம்பள நிர்ணயசபை பேச்சுவார்த்தைகளில் தங்களால் கலந்துகொள்ள முடியாது.” – எனவும் ரொஷான் இராஜதுரை குறிப்பிட்டுள்ளார்.
“ தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்கினால் வருடமொன்றுக்கு 35 பில்லியன் ரூபா மேலதிகமாக செலவிட வேண்டிவரும். எனவே, தற்போதைய சூழ்நிலையில் அதனை செய்ய முடியாது.
உற்பத்திக்கேற்ப சம்பளத்தை அதிகரித்துவழங்கும் இரு திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதனை நடைமுறைப்படுத்தினால் உற்பத்தியும் அதிகரிக்கும், சம்பளமும் அதிகரிககும்.” – எனவும் ரொஷான் ராஜதுரை குறிப்பிட்டுள்ளார்.










