1,700 படைவிட்டோடிகள் கைது!

முப்படைகளில் இருந்து தப்பிச்சென்றவர்களில் சுமார் 1,700 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

அத்துடன், தற்போது கடமையில் இருக்கும் பொலிஸார் மற்றும் முப்படையில் உள்ள ஒரு சிலர் முழு பாதுகாப்புப் பிரிவுக்கும் இழுக்கினை ஏற்படுத்தும் வகையில் பாதாள உலகக் குழுவின் குற்றச் செயலுக்கு துணைப்போயுள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தகைய நபர்களை அடையாளம் கண்டு ஒழுக்காற்று நடவடிக்கை மற்றும் பணிநீக்கம் செய்ய விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

கண்டிக்கு நேற்று வருகை தந்திருந்த அமைச்சர், மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிபெற்ற பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு கூறினார்.

‘ பாதாள உலகக்குழுவை ஒழிப்பதற்கான விசேட திட்டம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
பயிற்சிகளை நிறைவு செய்துள்ள 500 பொலிஸ் விசேட அதிரடிப்படை பிரிவு அதிகாரிகள் கடமை நிமித்தம் கலைந்து செல்ல உள்ளனர். அவர்களையும் மேற்படி ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள சந்தேகநபர்களை கைது செய்வதற்கான சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் சர்வதேச நாடுகளுடன் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.” எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.

Related Articles

Latest Articles