மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை வெற்றிக்கொண்ட இலங்கை அணி, தொடரை வெற்றிக்கொள்ளும் முனைப்புடன் இன்று திங்கட்கிழமை (29) இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்குகிறது.
முதல் போட்டியில் 187 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியை இலங்கை அணி பெற்றிருந்த போதும், பலம் மிக்க மே.தீவுகள் அணி இந்த போட்டியில் இலங்கை அணிக்கு கடுமையான சவாலை கொடுக்க காத்திருக்கிறது.
கடந்த 2005ம் ஆண்டிலிருந்து மேற்கிந்திய தீவுகளுக்கு
எதிராக விளையாடிய எந்தவொரு டெஸ்ட் தொடரையும், இழக்காத தங்களுடைய சாதனையை இந்த தொடரிலும் இலங்கை அணி முதல் போட்டியில் பெற்ற வெற்றியுடன் தொடர்கின்றது.
இலங்கை அணிக்கு எதிராக மே.தீவுகள் அணி 11 டெஸ்ட் போட்டிகளில், இலங்கை மண்ணில் விளையாடியுள்ளதுடன், 7 போட்டிகளில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளதுடன், 4 போட்டிகள் சமனிலையில் முடிவடைந்துள்ளன. எனவே, இலங்கை மண்ணில் இதுவரையிலும் வெற்றிபெறாத மே.தீவுகள் அணி, இந்த போட்டியில் வெற்றிபெற்று தங்களுடைய மோசமான சாதனையை தகர்க்க காத்திருக்கிறது.
இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர் இந்த டெஸ்ட் போட்டியுடன் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகுகின்றார். எனவே, இந்த போட்டியில் வெற்றியுடன் அவருக்கு விடைகொடுக்க இலங்கை அணி எதிர்பார்த்துள்ளது.
முதல் போட்டியில் திமுத் கருணாரத்ன, அஞ்செலோ மெதிவ்ஸ், தனன்ஜய டி சில்வா மற்றும் பெதும் நிஸ்ஸங்க போன்ற துடுப்பாட்ட வீரர்கள் பிரகாசித்திருந்ததுடன், சுழல் பந்துவீச்சும் சிறப்பாக அமைந்திருந்தது.
இந்த பிரகாசிப்பின் மூலம் கிடைக்கப்பெற்ற இந்த வெற்றியுடன், ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் புள்ளிப்பட்டியலில், இலங்கை அணி முதலிடத்துக்கும் முன்னேறியுள்ளது. எனவே, இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்றால், தங்களுடைய வெற்றி சதவீதத்தை 100 வீதமாக கொண்டு, இலங்கை அணியால், தொடர்ந்தும் முதலிடத்தை வகிக்க முடியும்.
முதல் போட்டிக்கான இலங்கை டெஸ்ட் குழாத்திலிருந்து துஷ்மந்தம சமீர, சுமிந்த லக்ஷான், ரொஷேன் சில்வா, கமில் மிஷ்ரா மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். எனவே, அணியில் குறைந்தது ஒரு மாற்றம் ஏற்படுத்தப்படலாம். குறிப்பாக, துஷ்மந்த சமீரவுக்கு பதிலாக மேலதிக துடுப்பாட்ட வீரராக சரித் அசலங்க டெஸ்ட் அறிமுகத்தை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.