அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவை பெற்றுக்கொள்வதற்காகவா ரிஷாட் பதியுதீனை அரசாங்கம் குறிவைத்துள்ளது என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நுவரெலியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” புத்தளத்திலிருந்து மன்னாருக்கு வாக்காளர்களை ரிஷாட் பதியுதீன் சட்டப்பூர்வமாகவே அழைத்துசெல்லப்பட்டுள்ளார். அப்படியிருந்தும் அவரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது. இது முற்றிலும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகும். இதனை அனுமதிக்கமுடியாது.
20 இற்கு எதிர்ப்பு வலுத்துவரும் நிலையில் ரிஷாட் தரப்பின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காகவா ரிஷாட்டை கைது செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்ற சந்தேகம் எழுகின்றது.” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவத்தையும் அவர் வன்மையாகக் கண்டித்தார்.