வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின் பங்குபற்றலுடன் விசேட நீதிமன்றத்தை நிறுவி உள்ளக விசாரணையை இலங்கை முன்னெடுக்காவிட்டால் சர்வதேச பொறிமுறை செயற்பட தொடங்கிவிடும் .அதனை தடுத்து நிறுத்த முடியாது – என்று ஐ.நாவுக்கான இலங்கையின் முன்னாள் நிரந்தர வதிவிட பிரதிநிதியும், சிரேஷ்ட இராஜதந்திரியுமான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்தார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அடுத்துவரும் அமர்வுகளில் என்ன நடக்கும் என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இலங்கை விவகாரம் தொடர்பில் 6 மாதங்களுக்கு ஒரு தடவை மீளாய்வு செய்யப்படும். 2022 செப்டம்பர்வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் திரட்டப்படும் ஆவணங்கள் எல்லாம் 2022 செப்டம்பருக்கு பிறகு உலக நாடுகளிலுள்ள நீதிமன்றங்களுக்கு அனுப்படும். அவ்வாறு நடைபெற்றால் , குறைந்தபட்சம் பிரேரணையை ஆதரித்த 22 நாடுகளிலாவது வழக்கு தொடுக்கப்படும்.
இவ்வாறு வழக்கு தொடுத்தாலும் எதுவும் செய்யமுடியாது என இலங்கை அரசாங்கம் சவால் விடுக்கும்பட்சத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, முதலீடு, சுற்றுலாத்துறை, வர்த்தகம் உள்ளிட்ட விடயங்களில் இறுக்கமான போக்கு கடைபிடிக்கப்படும்.
எனினும், இலங்கைக்கு இன்னுமொரு வாய்ப்பு எஞ்சியுள்ளது. 2022 செப்டம்பர் மாதத்துக்கு முன்னர் சேர். டெஸ்மன் டி சில்வாவாலும் (பரணகம ஆணைக்குழு) , அதற்கு முன்னர் நல்லிணக்க ஆணைக்குழுவாலும் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கமைய நம்பகமான விசாரணை பொறிமுறை உருவாக்கப்படவேண்டும்.
தங்களுக்கு விசுவாசமான நீதிபதிகளை நியமிக்காமல், உலகம் ஏற்றுக்கொள்கின்றனவர்களை அல்லது வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை நீதிபதிகளை உள்ளடக்கிய வகையில் விசேட நீதிமன்றமொன்றை நிறுவி, விசாரணைகளை முன்னெடுத்து தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படவேண்டும். வெளிநாட்டு கண்காணிப்பாளர்களுக்கும் அழைக்கப்படவேண்டும்.
அவ்வாறு செய்யாவிட்டால் சர்வதேச பொறிமுறை செயற்பட ஆரம்பித்துவிடும். இலங்கை விவகாரம் ஏற்கனவே சர்வதேச மயப்படுத்தப்பட்டிருந்தாலும் அதன் பொறிமுறை செயற்படவில்லை. இனி செயற்பட தொடங்கினால் அதனை நிறுத்த முடியாது.” – என்றார்.