2023 ஆம் ஆண்டுக்குள் 21,953 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன், 2,163 பேர் பலியாகியு ள்ளதாகவும் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.
இவ்விபத்துக்களில் 5,206 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் நிரந்தரமாகவோ அல்லது பகுதியாகவோ ஊனமுற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை மருத்துவ சங்கத்தின் வீதி பாதுகாப்பு நிபுணர் குழுவின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே, அவர் இந்தத் தகவலை வெளியிட்டார். மேலும் கருத்து தெரிவித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்,
டிசம்பர் மற்றும் ஜனவரி முதல் வாரங்களில் அதிகளவு வீதி விபத்துக்கள் பதிவாகி வருவதாகவும், இதற்கு மதுபோதையில் வாகனம் செலுத்துவதே பிரதான காரணமென அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்டறியும் விசேட நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், பெரும்பாலும் மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்கள் போக்குவரத்து குற்றங்களில் ஈடுபடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதும் போக்குவரத்து விபத்துகளுக்கு மற்றொரு முக்கிய காரணமாகச் சுட்டிக்காட்ட முடியும் என்றார்.
இந்த பண்டிகை காலங்களில் விருந்துபசார வைபவங்களில் கலந்து கொள்வதாக இருந்தால், சொந்தமாக கார் செலுத்துவதை தவிர்த்துவிட்டு வேறு சாரதியை அழைத்துச் செல்வது அல்லது வாடகை வாகனத்தில் செல்வது நல்லது என்றும் அவர் கூறியுள்ளார்.