2024 ஆம் நிதியாண்டுக்கான அரச செலவீனம் 203 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது. அதேபோல அமைச்சுகளுக்கான ஒதுக்கீட்டில் பாதுகாப்பு அமைச்சு மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
2024 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையில், அச்சட்டமூலம் இம்மாதம் முன்வைக்கப்படவுள்ளது.
இதில் 2024 அரச செலவீனமாக 3 ஆயிரத்து 860 பில்லியன் ரூபா உத்தேசிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 203 பில்லியன் ரூபா அதிகரிப்பாகும்.
அமைச்சுகளுக்கான ஒதுக்கீட்டில், பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கே அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அவ்வமைச்சுக்கு அடுத்தாண்டுக்கான 886 பில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளது.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சுக்கு 723 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வமைச்சுக்கு 2023 இல் 614 பில்லியன் ரூபா வழங்கப்பட்டிருந்தது.
பாதுகாப்பு அமைச்சுக்கு 423 பில்லியன் ரூபாவும், சுகாதார அமைச்சுக்கு 410 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. 2023 இல் பாதுகாப்பு அமைச்சுக்கு 410 பில்லியன் ரூபாவும், சுகாதார அமைச்சுக்கு 322 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டிருந்தது.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கு 403.6 பில்லியன் ரூபாவும், கல்வி அமைச்சுக்கு 237 பிய்யின் ரூபாவும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு 140.7 பில்லியன் ரூபாவும் 2024 ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சுக்கு 100 பில்லியன் ரூபாவும், நீர்பாசன அமைச்சுக்கு 84 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்துக்கு 6.6 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
