2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் தொடர்பில் சஜித் பிரேமதாச, சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகா ஆகியோருக்கிடையில் கடும் போட்டி நிலவுவதாக வெளியாகும் தகவல்களை ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்தது.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் சஜித் பிரேமதாச, சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகா ஆகியோருக்கிடையில் போட்டி நிலவுவதாக வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன மேற்படி தகவலை நிராகரித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” மேற்படி தகவலை நான் அடியோடு நிராகரிக்கின்றேன். அரசியல் எதிரிகளே திட்டமிட்ட அடிப்படையில் இவ்வாறான கதைகளை கட்டவிழ்த்துவிட்டு, முரண்பாடுகளை உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றனர். அவ்வாறு எந்தவொரு போட்டியும் இல்லை. ஐக்கிய மக்கள் சக்தியின் யாப்பு என்பது ஜனநாயக அம்சம் கொண்டது. தலைவர் பதவிக்கு வருவதற்கு எவருக்கும் தடை இல்லை.
எனினும், பதுளையில் நடைபெற்ற சம்மேளனத்தின்போது சஜித்தை தலைவராக நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அவர் தலைமையில் முன்னோக்கி பயணிப்போம்.” – என்றார்.










