இலங்கை வரலாற்றிலேயே மிக அதிகப்படியாக கடந்த 2025ஆம் ஆண்டில் 1.51 பில்லியன் டொலர் வருமானத்தைத் பெற்றுத்தந்த தேயிலை ஏற்றுமதித் துறையை மேலும் விரிவுபடுத்தி, வரும் 2030ஆம் ஆண்டளவில் அதன் வருமானத்தை 2.5 பில்லியன் டொலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் திங்கட்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த காலங்களில் பல துறைகள் வீழ்ச்சி கண்டிருந்த போதிலும், தேயிலை ஏற்றுமதி துறை இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் குறிப்பிட்டவொரு இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இலங்கை வரலாற்றில் 2025ஆம் ஆண்டு தேயிலை ஏற்றுமதி மூலம் அதிகளவு வருமானம் ஈட்டப்பட்டது. 17.2 பில்லியன் டொலர் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருமானத்தில், 1.51 பில்லியன் டொலர் தேயிலை ஏற்றுமதி ஊடாக மாத்திரம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
தேயிலை ஏற்றுமதியை மேலும் அதிகரிப்பது குறித்து ஆராய்வதற்காக தேசிய மட்ட குழுவொன்று செயற்படுகிறது. அக்குழு அண்மையில் கூடிய போது, 2030ஆம் ஆண்டாகும் போது தேயிலை உற்பத்தியை 400 மில்லியன் வரை உயர்த்துவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதோடு, ஏற்றுமதி வருமானத்தை 2.5 பில்லியன் டொலர் வரை அதிகரிப்பதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
உலகலாவிய யுத்த நிலைமை இலங்கையின் தேயிலை ஏற்றுமதியில் குறிப்பிட்டளவு தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்பட்டது. வழமையாக ஏற்றுமதியின் போது, ஒரு குறிப்பிட்ட தொகை மீதமடையும். அவ்வாறு மீதமடையும் தொகை 14 சதவீதத்தை விட குறைவாகக் காணப்பட வேண்டும். ஆனால் மார்ச் மாதத்துக்கு முன்னர் மீதமடைந்த தொகை சுமார் 16 சதவீதம் வரை உயர்வடைந்தது. அது தற்போது 9 சதவீதமாகக் குறைவடைந்துள்ளது. எனவே தேயிலை ஏற்றுமதியில் யுத்த நிலைவரம் பாரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
2026ஆம் ஆண்டு முதலாம் காலாண்டில் தேயிலை ஏற்றுமதியூடான வருமானம் 351.58 மில்லியன் டொலராகும். இது ஏற்றுமதி வருமானத்தில் சிறு வீழ்ச்சியைக் காண்பிக்கிறது. காலநிலை, உரப்பற்றாக்குறை உள்ளிட்ட காரணிகளும் இதில் தாக்கம் செலுத்துகின்றன. எனவே தான் இம்முறை தேயிலைக்கான உர மானியத்தை வழங்குவதற்காக 2000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய உர நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த ஏப்ரலில் தேயிலை அருவடை அதிகரித்துள்ளது. அதன் பிரதி பலனை இம்மாத இறுதியில் பெற முடியும் என்று நம்புகின்றோம் என்றார்
நன்றி – வீரகேசரி
