21 கோவில்களில் கொள்ளையடித்ததாகக் கூறப்படும் நபர் நுவரெலியா பொலிஸாரால் கைது

நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் 21 கோவில்களை உடைத்து பணம் மற்றும் நகைகளை களவாடினார் எனக் கூறப்படும் நபரொருவரை நுவரெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன் குறித்த நபருக்கு, நகைகளை விற்பனை செய்ய உதவிய இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைதானவர்கள் நுவரெலியா நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தப்பட்டனர்.

இதன்போது பிரதான சந்தேகநபரை 21 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். ஏனைய இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அம்பேவெல பொரகஸ் முகவரியைச் சேர்ந்த (வயது 43) ரவி என்றழைக்கப்படும் முத்துசாமி ரகுநாதன் என்பவரே பிரதான சந்தேக நபராகக் கருதப்படுகின்றது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட நுவரெலியா பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆர்.எஸ்.ராஜசிங்க,

” நுவரெலியா தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரேமலால் ஹெட்டியாராச்சியின் பணிப்புரைக்கமைய சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. விசாரணையின்போது பிரதான சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் குறிப்பாக கோவிலை உடைத்து திருடுவதற்கு முன் கடவுளை வணங்கி, தான் கடவுளிடம் மன்னிப்பு கேட்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஓராண்டுக்குள் 21 கோவில்களை உடைத்து அதில் கிடைத்த பணத்தை வாழ்க்கைக்கு பயன்படுத்தியதாகவும், திருடப்பட்ட தங்க நகைகளை நுவரெலியா ஹட்டன் மற்றும் தலவாக்கலை பகுதிகளிலுள்ள தங்க நகைகள் பதப்படுத்தும் நிலையங்களுக்கு விற்பனை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தலவாக்கலை, ராகலை, ஹைபோரஸ்ட், லிந்துல, ஹட்டன், பொகவந்தலாவ, நானுஓயா, உடபுஸ்ஸல்லாவ, வெலிமடை, கெப்பெட்டிபொல, மாத்தளை, கம்பளை, நாவலப்பிட்டி ஆகிய பொலிஸ் எல்லைக்குட்பட்ட இருபத்தொரு இந்து கோவில்களை உடைத்துள்ளார் . ” – என்றார்.

நிருபர் – நீலமேகம் பிரசாந்த்

Related Articles

Latest Articles