நுகேகொடை கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காவிட்டால் அது அக்கட்சிக்கே அரசியல் ரீதியில் பின்னடைவாக அமையும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று (29) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரான சஞ்ஜீவ எதிரிமான்ன மேற்படி விடயத்தை சுட்டிக்காட்டினார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊழல், தவறான நிர்வாகம் மற்றும் ஜனநாயக விரோத நடைமுறைகளுக்கு எதிராக நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் கூட்டம் மற்றும் எதிர்ப்பு பேரணியை நடத்துவதற்கு முக்கியமான சில எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி , ஐக்கிய தேசியக் கட்சி , பிவிதுரு ஹெல உறுமய , மக்கள் ஐக்கிய முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா மகாஜன கட்சி என்பன இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. எனினும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குறித்த பேரணியில் பங்கேற்காதிருக்க தீர்மானித்தள்ளது.
இந்நிலையிலேயே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.
” கூட்டத்தில் பங்கேற்பதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் முடிவெடுக்கும் உரிமை ஐக்கிய மக்கள் சக்திக்கு உள்ளது. அந்த உரிமையை நாம் மதிக்கின்றோம். எனினும், பிரதான எதிர்க்கட்சிக்குரிய பொறுப்பை அக்கட்சி நிறைவேற்றும் என நம்புகின்றோம்.
நுகேகொடை கூட்டத்தில் அக்கட்சி பங்கேற்கும் என நம்புகின்றோம். இன்னும் காலம் உள்ளது. சிலவேளை பங்கேற்காவிட்டால் அது அக்கட்சிக்கே பாதகமாக அமையக்கூடும்.” எனவும் சஞ்ஜீவ எதிரிமான்ன குறிப்பிட்டார்.
		
                                    